
வாரணாசி

பெரும்பாலும் ஒரே
மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும்படியான வளைவு வளைவான சொருகு ஓடு வேயப்பட்ட வீடுகளிருக்கும் பழமையான தெருவிற்குள் அந்த வாகனம் நுழைந்தது . .
எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளைக் கோலங்களிர ுந்தது. பாலாமணி கையைக் காட்டி கோலமிடப்படாத இடது பக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான் . வெளியே நான்கைந்து வயசாளி ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள் .
இறங்கி வண்டியின் முகப்பை தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுனரிடம் சொன்னான். பாலாமணியின் ஒரு கையில் கறுத்த கோழியும் , மறு கையில் அரசு முத்திரையிருக்கும் ஓரிரு காகிதங்களுமிருந்தன. வீட்டிற்குள் நுழையப் போனவனை நிறுத்தி ஒரு பெரியவர் சொன்னார்.
”ஏன்டா, பாலாமணி நீயாவது அவகிட்டசொல்லக் கூடாதா ? ''
ஏற்கனவே அஞ்சாறு வருஷம் படுக்கைல கிடந்த உடம்பு ...அவ்வளவு தூரம் தாங்காதுடா . பூரணி கிட்ட சொல்லு. சட்டுபுட்டுன்னு இங்கேயே எல்லா ஈமக்காரியத்தையும் முடிச்சிப்புடலாம் ."
‘’நீங்க செத்த நேரம் கம்முனு இருங்க மாமா‘’ சொல்லியவாறு வீட்டிற்குள் நுழைந்தான். மாதவனின் இறந்த உடலின் தலைமாட்டில் பாந்தமாய் சிறிய திரி நாவிலிருந்து விளக்கொ ன்று சுடர் விட்டுக் கொண்டிருந்தது. பழமையான மூன்று கட்டு வீடு. நடுக் கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். .
அருகாமை வீட்டிலிருந்து மூன்றோ, நான்கோ வயசான பெண்கள் , பாலாமணியின் மனைவி, அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் , வீட்டின் நுழைவாயிலில் திண்ணையில் நான்கைந்து ஆண்கள்… அவ்வளவுதான் கூட்டம் .
பூரணி பாலாமணியைப் பார்த்ததும் கேள்வியைப் போல் முகத்தை வைத்து அவனைப் பார்த்தாள் . அவன் வீட்டின் சமையல் கூடத்திற்கு அவளை வரச் சொல்லி சைகை காட்டிவிட்டு முன்னால் போனான். இடுப்பில் சுற்றியிருந்த நிறம் மழுங்கிய மஞ்ச ள் நிறப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
‘’நாலஞ்சு இடத்துல அலைஞ்சிட்டேன் . பிணத்தைத் தூக்கிட்டு வாரணாசி வரைக்கும் வர எந்த ஆம்புலன்ஸ் வண்டியும் முதல்ல தயாரில்லை. வர ஒத்துக்குறவனும் நோக்கத்துக்கு வாடகை கேக்குறான். இந்த வண்டிக்காரன் மட்டும்தான் ஒத்துக்கிட்டான் . வாடகை கொறச்சல்தான். ஆனா வண்டி கொஞ்சம் பழசு . பின்னாடி குளிர் பதனமெல்லாம் நல்லாவே வேலை செய்யுது. மூணு, நாலு நாள் ஆனாலும் உடம்பு தாங்கும். கெடாது. அவன்கிட்ட கேட்டுட்டேன். மூணாம் நா சாயுங்காலத்துக்குள்ள போயிறலாம்னு சொன்னான்.’’
பூரணி அவனைப் பார்த்தபடியிருந்தாள்.
‘’இந்தா‘’ கையிலிருந்த அரசுமுத்திரைக் காகிதத்தைக் கொடுத்தான். ''அவ்வளவு தூரம் எடுத்திட்டு போறச்ச . வழில மறிச்சி போலீசுக்காரங்க கேக்க வாய்ப்பிருக்கு . அதான் கவர்ன்மெண்ட் டாக்ட்ரப் பிடிச்சி ‘டெத் செர்டிபிகெட்‘ வாங்கிட்டு வந்தேன். பத்திரமா வச்சிக்கோ.‘’ வாங்கிக் கொண்டாள் .
த லையைத் திருப்பி காசிப் பானையைப் பார்த்தவாறு சொன்னான்.
‘’மன்னிக்கணும் பூரணி என்னால வர முடியல‘’
அவளின் உதடுகள் நீர் படாமல் உலர்ந்து ஒட்டிக் கொண்டு பிரிய முடியாமல் பிரிந்தது.
''பரவால்ல.....’’ அவ்வளவுதான்பேசினாள்.
பாலாமணி பூரணியின் பெரியம்மா மகன். சகோதரன் உறவு. ஓரிரு வயதுதான் அவளினும் குறைவாயிருக்கும் . பூரணிக்கு நாற்பதை நெருங்கும் வயது. குழந்தைப் பேறில்லை . உறவினர்கள் யாரும் அவளோடு பெரிதாய்ப் புழக்கத்திலில்லை.
பூரணி காண்போரிடமெல்லாம் பணம்கேட்பாள் என்பதுதான் பெரும்பாலும் அவர்களின் குற்றச்சாட்டு. ஓரளவிற்கு அது உண்மைதான். இப்போது கூட மாதவனின் இறப்பிற்கு அதிகம் பேர் வராததிற்குக் காரணம் அதுவாகத்தானிருக்கும்.
படுக்கையில் விழுவதற்கு ஆறேழு வருடத்திற்கு முன் வரை மாதவன் கும்பகோணம் விசாலம் சிட்ஸில் உதவி மேலாளராக வேலை பார்த்தான். கை நிரம்பும் சம்பளம் . வேலைப் பளுவெனக் காரணம் சொல்லி மெல்ல குடிப் பழக்கமும் , சீட்டாட்டமும் துவங்கியது. வாரக் கடைசியில் மீனாட்சி லாட்ஜில் அறையெடுத்து இரவெல்லாம் குடியும் சீட்டாட்டமும் தொடர்ந்தது. அப்போதெல்லாம் சனிக்கிழமை மாலை துவங்கும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீளும். ஒரு சிலர் மட்டும் வீட்டிற்குப் போய் தலை காட்டி விட்டு பின் மீண்டும் வந்து ஆட்டத்தைத் தொடர்வார்கள் . மாதவன் இரவு வேலை , கணக்கு முடிக்க லேட்டாகி விட்டது எனக் காரணம் சொல்லுவான்.
பூரணி கொஞ்சம் கடுமை காட்டத் துவங்கியதும் மது வாடை போன பின் லாட்ஜிலிருந்து அதிகாலை கிளம்பி உறக்கச் சொக்கோடு வீட்டு வாசலைத் தட்டி நிற்பான். ஒரு நாள் அதிகாலையில் மது போதையோ, உறக்கக் கலக்கமோ , அல்லது ரெண்டும் கலந்துமா தெரியவில்லை. வீட்டிற்கு வரும் வழியில் விபத்தாகி ரெத்தக் காயத்தோடு கிடந்தான்.
எதிலோ மோதியோ அல்லது எதுவும் மோதியோ தெரியாது, விபத்தில் தண்டுவடம் உடைந்து விட்டது . உயிரை மீட்டெடுக்க பெரும் பொருட் செலவு . மாதவனின் அலுவலகத்தில் சிறியதாய்ப் பணம் கொடுத்தார்கள். வீட்டில் சமீபத்தில் சேமிப்பென்று பெரிதாய் ஒன்றுமில்லை. கையிலிருந்த கடைசி பொன் நகை வரை விற்றும் மருத்துவச் செலவு அடைபடவில்லை . அப்போது ஆரம்பித்ததுதான் .உறவினர்களிடம் கடன் கேட்கத்து வங்கியது.
எவ்வளவு செலவு செய்தாலும் மாதவனை முழுதாய் மீட்க முடியவில்லை . மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகையில் நிரந்தரமாய் இனி கழுத்துக்குக் கீழ் இயக்கமிருக்காது. மிச்சமிருக்கும் வாழ்நாளை படுக்கையில்தான் கழிக்க முடியும் வேறு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள் .வீட்டிற்குத் தூக்கி வந்து விட்டாள். மாதவனின் வயதான பெற்றோர்கள் இவளைத்தான் குறை சொன்னார்கள் . ஆரம்பத்திலேயே குடிப்பதை அறிந்து கண்டிப்பாய் நடந்திருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டு அவளை அப்படியே கைவிட்டு விட்டுக் கிளம்பி விட்டார்கள் .
ஏறக்குறைய எல்லா உறவினர்களுமே எந்த மாற்றமுமில்லாமல் அப்படித்தான் செய்தார்கள். அதன்பிறகு இப்போது வரை யாரும் இந்த வீட்டிற்கு வருவதில்லை . பாலாமணி மட்டும் அடிக்கடி வந்து பண உதவிகள் செய்து வந்தான் .ஆரம்பத்திலெல்லாம் மாதவன் பூரணியைப் பார்த்து கண்ணீர் வடிப்பான் . தன்னால்தான் பூரணியின் வாழ்வு இவ்வளவு மோசமான நிலையை அடைந்து விட்டதாகப் புலம்புவான் . பெருவாரியாய் அவளிடம் மன்னிப்பு கேட்பான் . அதுவும் சிறிது நாளைக்குதான்.
பின் அவனும் நீ ஆரம்பத்திலேயே என்னைக் கண்டு கொள்ளாமல் விட்டதால்தான் நான் இப்படியான நிலையை அடைந்து விட்டேன் என புகார் கூறத் துவங்கினான் . பூரணி எப்போதும் போல் எதுவும் பதில் பேசமாட்டாள் .மௌனமாய் ஓரிரு துளி கண்ணீர் வடிப்பு… அவ்வளவுதான் அங்கிருந்து நகர்ந்து விடுவாள்.
எது என்ன ஆனாலும் மாதவனை அதிகாலையிலேயே குளிப்பாட்டி விட வேண்டும் . பின் நல்ல வெளுத்த வேஷ்டியை உடுத்திவிட்டு கிழக்கு திசைக்கு அவனைக் காட்டி நெற்றியில் திருமண் இடச் சொல்லுவான்.
இயக்கமற்று துவண்டு கிடக்கும் கரங்களை அவளி டம் சொல்லி அள்ளி எடுத்து ஒரு சேர வைத்து சுவாமிகளின் திரு உருவப் படங்களை நோக்கி ஒரு கும்பிடு, விஷ்ணு சகஸ்ர நாமம், அதின் பின் சில மந்திர உச்சரிப்புகள், அதன் பின்தான் உணவூட்டச் சொல்வான்.
இறுதியில் மருந்திட்டு அவனைக் கிடத்துவாள். இடையில் சிறு நீர், மலம் கழிக்க வேண்டுமென்றால் கத்தி அழைப்பான். பூரணிதான் அள்ளிப் போட்டு, துடைத்தெடுப்பாள். பூரணி தனது கடமையாய் நினைத்து எல்லாவற்றையும் சரியாக எந்த முகச் சுழிப்பும், எரிச்சலுமில்லாமல் செய்து வந்தாள் . மாதவன்தான் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக் கொண்டிருப்பான்.
உப்பு சேர்மானம் சரியில்லையென உணவை அவள் முகத்தில் துப்புவான். பூரணியை வீட்டின் நிலைப் படியைத் தாண்ட விடமாட்டான் .மளிகை , காய்கறி என எதற்கும் கடை வீதிக்குப் போக விடமாட்டான் . போனவள் திரும்ப வீடு வரமாட்டாள் . தன்னை இப்படியே விட்டு விட்டு வேறு யாருடனோ பேருந்து ஏறிவிடுவாளென. பயம் கொள்ளத் துவங்கினான் .
எந்தப் பொருளென்றாலும் மளிகைக் கடையில் சொல்லி, வீட்டில் எடுத்து வந்து சேர்க்கும்படிக்கு சொல்லச் சொல்வான் .மளிகைக் கடையிலிருந்து பொருட்கள் கொண்டு வருபவன் இளம் வயதினனாய் இருந்து விட்டால் அவ்வளவுதான் . நிமிடத்திக்கொருமுறை அவள் தன் கண்முன்தான் இருக்கிறாளா என்று சோதித்துக் கொண்டே இருப்பான் . அவன் கண்ணிலிருந்து ஒரு ஐந்து நிமிடம் அவள் நகர்ந்தால் போதும். எவனோடு படுத்த .? என்னால முடியலன்னுதான இப்படிப் பண்ற என்று கத்தி கூப்பாடு போடுவான் .
ஊரிலிருக்கும் அத்தனை கடவுளையும் கூப்பிட்டு என்னை ஏன் இப்படி ஆக்கிட்ட பகவானே, வேகமா என்ன எடுத்துக்கோ என்று அழுது அரற்றுவான். பூரணியின் சிவந்த நிறமும் , இளமையும் , அவனது இயலாமையும் , கையாலாகாத்தனமும் உருத்திக் கொண்டேயிருக்கும் .பாலாமணி அவளின் சகோதரன் முறை . உறவுகளில் அவன் ஒருவன்தான் இவளுக்குப் பலவகையிலும் உதவியாயிருப்பவன். அவன் பல நேரங்களில் பாலாமணியையும் இவளையும் இணைத்துப் பேசுவான்.
நீ இவ்வளவு அழகாயிருப்பதால்தான் அவன் உனக்குப் பணம் அளிக்கிறான் என்று வாயும் , மனதும் கூசாமல் பலி போடுவான். பாலாமணிக்குத் தெரிந்து அவன் இந்த ஆளை விட்டு விட்டு என் வீட்டுக்கு வா என்று கோபமாய் ஏசினான். அழுதபடி எதற்கும் மறுத்து விட்டாள் . அழுகை அழுகை அது மட்டும்தான் அவளுக்குத் துணையாயிருந்தது.
சில நேரங்களில் சொற்களால் அனுதினமும் தன்னைச் சாகடிக்கும் இவனை கழுத்தை நெரித்துக் கொன்று விடத் தோணும் அவளுக்கு. அதன்பின் இருட்டறையில் குன்னிக் கொண்டு அமர்ந்தபடி சத்தம் வராதவாறு தன்நிலையை எண்ணி கேவிக் கேவி அழுவாள்.
பூரணியிடம் இப்போதெல்லாம் உடல் முழுக்க இறுக்கமும் , பெரும் அமைதியும் குடிகொண்டு விட்டது . மோசமான சொற்களை கேட்டுக் கேட்டு அவளின் உடல் இறுக்கமான கற்களைப் போன்று மாறிவிட்டது. ஆனால் காதுகள் மட்டும் நெகிழ்வான சதைத் துளையாய் இருக்கிறதாய் உணர்கிறாள். எவ்வளவு முயன்றும் அது மட்டும் கல் தன்மைக்கு மாறாமலிருக்கிறது .
அதுவும் அப்படியாக மாறிவிட்டா ல் எந்தச் சொல்லும் தன்னைக் காயப்படுத்தாது என்று நம்பத் துவங்கினாள். மாதவனின் வைத்தியத்திற்கென சுற்றியிருந்த அத்தனை மனிதர்களிடமும் கடன்வாங்கி விட்டாள்,.
பாலாமணியிடமும் கணக்கு வழக்கில்லை . இப்போதெல்லாம் அவன் வீட்டிற்குள் வருவதில்லை . வாசலிலேயே பணத்தைக் கொடுத்து விட்டு நிமிடத்திற்குள் கிளம்பிவிடுவான். ஐந்தாறு வருடமாய்ப் படுக்கையில் கிடந்து மாதவனின் உடல் மிகவும் தேய்மானமாகி விட்டது . கையும் காலும் சூம்பி, தலை மட்டும் பருத்து தெரிந்தது .
இறுதியாய் சேஷாத்திரி டாக்டர்தான் சொன்னார். இன்னும ் சொற்ப வாழ்நாள்தான். மூணு மாசம் கூட அதிகம் . எந்த ஒளிவுமில்லாமல் மாதவனின் முன்னால் வைத்தே சொல்லிவிட்டார் . மாதவன் ஓங்கி ஓங்கி அழுதான். வாழ பிரயாசை கொண்டவனைப் போல்அரற்றினான் . தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டான் . பூரணியின் காது கொஞ்சமாய்க் கல்லின் தன்மைக்கு மாறி விட்டது போல . எந்த அதிருப்தியும் இல்லை .திருப்தியும் இல்லை . ஆறேழு வருடமாய், கண்ணீர் மட்டும் உலராமல் அவ்வப்போது கசிந்து கொண்டேயிருந்தது.
ஒரு அதிகாலையில் நீராடிவிட்டு சுவாமி கும்பிடு முடிந்ததும் பூரணியிடம் கேட்டான் . பூரணி எந்த ஜென்மத்தின் கடனோ நீ எனக்காக நிறைய செஞ்சிட்ட .. பார்த்த இடத்துலலாம் கடன் வாங்கி வைத்தியம் பண்ணி ட்ட . கடைசியா எனக்காக இந்த ஒண்ண மட்டும் செஞ்சிடு.''
பூரணி என்ன என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
”எனக்கு அடுத்த பிறப்பு வேண்டாம், வேதத்தையும் சாஸ்திரத்தையும் நம்புறவனா சொல்றேன் . சாஸ்திரப்படி இறந்த உடலை எடுத்துப் போய் வாரணாசில கொண்டு போய் எரிச்சி சாம்பல கங்கைல கரைச்சி விட்டா எனக்கு பிறப்புச் சங்கிலி அறுபட்டு, மறு ஜென்மம் இல்லாம போகும். எனக்காக இது ஒரு காரியத்த மட்டும் மறுக்காம செய்வியா ?
ஒருவித வணங்குதலோடும், நன்றியோடும் பார்த்தான்.
பூரணி சிறியதாய்த் தலைஆட்டினாள்.
இருவருமே இறப்பின் நாளை எதிர் நோக்கி அந்த நாளுக்காகக் காத்திருந்தார்கள். மாதவன் இருக்கிற நாட்களை முழுக்கப் பார்த்து விட வேண்டுமென்று இரவும் பகலுமாய் முழுக்க உறங்காமலேயே இருந்தான். அடிக்கடி பூரணியை அருகழைத்து அமர்த்தி அவளின் முகத்தைப் பார்த்து க் கொண்டேயிருந்தான் .தீடிரென வெடித்து அழுதான். பூரணி எப்போதும் போல் இறுக்கமாயிருந்தாள்.
மாதவன் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருந்தான் . நான் இறந்ததும் நீ வேறொரு கல்யாணம் பண்ணிப்பல ?நீ பாவம், பூரணி. கட்டிக்கோ . என்ன கட்டிக்கிட்டு ரெம்ப கஷ்டப்பட்டுட்ட . அவன் முகத்தை ஏறிட்டு எந்தச் சலனமுமில்லாமல் பார்ப்பாள் . சிறிது நேரம் கழித்து பூரணியை அழைத்து நீ வேற கல்யாணம் பண்ணிக்காத பூரணி. உன்ன வேற யாரும் தொடக் கூடாது. இப்படியே இருந்திரு.
‘’ஏன் இருக்க முடியாதா ? அப்படித்தான் இருக்கணும் என்று கூறி, பற்களைக் கடித்துக் கொண்டுஅழுவான். பூரணி இப்போதும் அவன் முகத்தை ஏறிட்டு எந்தச் சலனமுமில்லாமல் பார்ப்பாள். காது முழுக்க நிரம்பிக் கிடக்கும் இந்தச் சொற்களையெல்லாம் செரிக்கமாட்டாமல் கிடந்தாள்பூரணி.
இன்று அதிகாலையில்தான் உயிர் பிரிந்தது. இன்று அழுகையில்லை . இப்போதும் இறுக்கமாய் முகத்தில் சிறு சலனமுமில்லாமல் அவன் முகத்தை ஏறிட்டபடி வீட்டிற்குள் நின்று கொண்டிருந்தாள் . மாதவனின் உடலை முகம் மட்டும் தெரியும்படிக்கு வெள்ளை காடாத் துணியால் ஒருவன் சுற்றினான் . ஒரு சிறிய கைப்பையில் இரண்டு மாற்றுத் துணிகளை எடுத்து வைத்து பாலாமணியின் மனைவி வந்தாள்.
வெளியே வண்டியை பாலாமணி காட்டிய திசைக்கு திருப்பி வைத்துவிட்டு காரிலிருந்து நட்ராஜ் தரைக்கு இறங்கினான் . எதோ ஒரு வீட்டிலிருந்து தீ கங்குகுள் பால் சாம்புராணியைப் போட்டு வாசனையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் போல. வாசனை வீட்டிலிருந்து தெருவுக்குள் இறங்கி வந்து கொண்டிருந்தது.
வேறொரு வீட்டிலிருந்து க்ரிஷ்ணனின் பிருந்தாவனப் பாடல்களின் ஓசை தம்புராவின் பின்னணியோடு அறுந்து அறுந்து செருமலோசையோடு கசிந்து வந்தது . யாரேனும் ஒரு பெண் பழகிக் கொண்டிரு ப்பாள் போல. நடுவிலிருந்து கொஞ்சம் பசுஞ்சாணம் , ஈர வைக்கோல் வாடை கலந்த தொழுவத்தின் வாசனை அடித்தது.
நட்ராஜுக்கு நாற்பத்தியொரு வயது .
மனைவி இவனிடமிருந்து விலகி வேறு திருமணம் செய்து கொண்டாள். .எந்த மனிதரின் மேலும் அவனுக்குத் திடகாத்திரமான நம்பிக்கையில்லை. சிறு வயதிலிருந்து மோட்டாரில் இருக்கிறான் . நான்கு ஆண்டுகளாய் சொந்தமாக இரண்டாம் கை மாறிய ஆம்புலன்ஸ் வாகனமொன்று வைத்து ஓட்டுகிறான்.
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க நெருப்புக் குச்சி தேடி எங்கிருந்தோ பற்ற வைத்து விட்டு வந்தான்.
பாலாமணி கிளம்பலாமா என்று கேட்டான்.
.தலை அசைத்ததும் வந்து ஒரு கை பிடிக்க முடியுமா என்று கேட்டான். நட்ராஜ் மறுத்து விட்டான் .
பின் மனது கேட்காமல் பாலாமணியின் முதுகை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் பூரணியைத்தான் பார்த்தான் . இந்த இறப்பிற்காக இல்லாமல் பல ஆண்டுகளாய் வேரூன்றிய சோகம் கூடிய முகம் . பாலாமணி தலைமாட்டில் பிடிக்கும்படி சொன்னான் . பாலாமணியும் வேறொருவரும் உடலைப் பிடித்துக் கொள்ள நட்ராஜ் பின்னோக்கி தெருவிற்கு நடந்தான் . வாகனத்தின் இரண்டு கதவுகளும்தான் நெஞ்சைத் திறந்து கொண்டு நிற்பது போல் நின்றன. நட்ராஜ் மேலேறி தலையை வாகனத்திற்குள் நுழைத்தான். முழு உடலும் நுழைந்ததும் பூரணி வீட்டிலிருந்து வெளியேறினாள்.
அ வள் பாதங்கள் அந்தத் தெருவில் நடந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன. வண்டியில் ஏறி அமர்ந்தாள் . சில வீடுகளிருந்து பெண்கள் எட்டிப் பார்த்து எதோ பேசிக் கொண்டார்கள் . பாலாமணி மாற்றுத் துணி அடங்கிய கைப்பையை அவள் காலடியில் வைத்தான். வேறொருவன் இரு கால்களும் கட்டியிருந்த கறுத்த கோழியை மாதவனின் உடலிருக்கும் சிறு கட்டில் மாதிரியான அமைப்பின் கால்மாட்டில் கட்டி வைத்தான் .
இது எதற்கு என்பதுபோல் பாலாமணியைப் பார்த்தாள்.